கட் அவுட் வச்சவங்களுக்கு கெட் அவுட் சொல்லியும் அடங்கலையே... எங்கெங்கும் கட் அவுட் , பிளெக்ஸ்கள்
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்காக அம்மாவை வரவேற்று வைக்கப்பட்ட கட்அவுட்கள், பேனர்களால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிட்டது. இதனால் கட் அவுட் வைத்தவர்களை கெட் அவுட் சொன்னார் ஜெயலலிதா. தேர்தல் நெருங்குவதால் மக்களின் கோபத்தை சம்பாதிக்கும் வகையில் ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என்று கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.
கட்சித்தலைமையின் உத்தரவையும் மீறி சில அமைச்சர்கள் சிலர் போயஸ்கார்டன் தொடங்கி தலைமைச் செயலகம் போகும் பாதையில் ராதாகிருஷ்ணன் சாலை முழுவதும் ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். சென்டர்மீடியன்களில் கட் அவுட்களை வைத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் அதிமுகவினர்.
தலைமையின் கோபத்திற்கு ஆளாகவேண்டுமே என்று சிலர் மட்டுமே ப்ளெக்ஸ் அடிக்க கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்ப வாங்கிவிட்டதாக கூறினாலும், பெரும்பாலோனோர் மீண்டும் ப்ளெக்ஸ் பேனர் அடிக்க ஆர்டர்கள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்களாம்.

உச்சநீதிமன்ற உத்தரவு
திருவான்மியூர் பொதுக்குழுவின் போது வைக்கப்பட்ட பேனர் தொடர்பாக போடப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அதிகாரிகள் பெர்மிசன் வழங்கியதில் தில்லு முல்லு செய்திருந்ததைக் குறிப்பிட்டு, அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

11 பேர் கொண்ட குழுவிற்கு தடை
அதிமுகவில் பிளெக்ஸ் விளம்பரங்கள் உருவாக்கும் 11 பேர் கொண்ட குழுக்களை எல்லாம் சில காலம் கமுக்கமாக இருக்குமாறு சொல்லியிருக்கிறார்கள் என்று கூறப்பட்டாலும் மீண்டும் ப்ளெக்ஸ்கள் ராதாகிருஷ்ணன் சாலையில் முளைத்துள்ளன.

நலத்திட்டங்கள் தொடக்கம்
பொங்கலுக்கு 12,624 சிறப்பு பேருந்துகளை இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே போல் பொங்கல் பையுடன் 100 ரூபாய் பணமும் கொடுத்தாங்க. அடுத்து நான்கைந்து நலத் திட்டங்களை கோட்டையில் இருந்து அறிவிச்சாங்க. அதில் சிலவற்றை முதல்வரே கோட்டையில் வைத்து தொடங்கிவைத்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்த திட்டங்கள் தொடர்பாக போஸ்டர்கள், கட்-அவுட்கள் கோட்டையிலோ, கோட்டைக்குச் செல்லும் வழியிலோ வைக்கப்படவில்லை.
போக்குவரத்து துறை அமைச்சர் உள்பட யாரும் கட்-அவுட்டில் ஆர்வம் காட்டவில்லை. அரசு செய்திக் குறிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரில் ராதாகிருஷ்ணன் சாலையில் பத்தடிக்கு ஒரு ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

நத்தம் விஸ்வநாதன், காமராஜ்
ராதாகிருஷ்ணன் சாலையில் சென்டர் மீடியன்களில் வரிசையாக அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் காமராஜ் பெயரிலும் கட் அவுட்கள் வைக்கப்பட்டு கண்ணை பறிக்கின்றன.

பதவி பறிக்கப்படுமோ?
பொதுக்குழு, செயற்குழுவிற்கு வைத்த பேனர்களே மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ப்ளெக்ஸ்பேனர்கள் வைத்தது ஏன் என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. பேனர் வைத்த செந்தமிழன் பதவி பறிக்கப்பட்டது போல தற்போது ப்ளெக்ஸ் வைத்துள்ள அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications