சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் குடும்ப வாரிசுகளின் கல்விச் செலவை பாமக ஏற்கும்: அன்புமணி ராமதாஸ்
திருவண்ணாமலை: துப்பாக்கிச் சூட்டில் பலியான 20 பேரின் குடும்ப வாரிசுகளின் கல்விச் செலவை பாமக ஏற்கும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர்.

அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை பாமக இளைஞரணித்தலைவரும் தர்மபுரி எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் போளூரில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசினார்.அப்போது அவர், ''ஆந்திராவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 பேரின் வாரிசுகளின் கல்விச்செலவை பாமக ஏற்கும். வாரிசுகள் உயர் கல்வி வரை படிக்கும் செலவை ஏற்கிறோம். 20 பேரின் குடும்பங்களுக்கும் 25 லட்சம் பணம், வீடு, வேலைவாய்ப்பு தர தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சி.பி.ஐ விசாரணை தேவை
இதனிடையே தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆந்திர மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரத்தில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. இந்தச் சம்பவத்துக்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது இரண்டு மாநிலங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியாகும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 356-ஆவது பிரிவை பயன்படுத்தி சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசை, மத்திய அரசு கலைத்து விட்டு, அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications