பொறியியல் பொது கலந்தாய்வு திடீர் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலை. அறிவிப்பு
சென்னை: இன்று (ஜூன் 27) தொடங்க இருந்த பொறியியல் பொது கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
புதிய படிப்புகளுக்கு அனுமதி கோரி ஏஐசிடிஇ-யின் ஒப்புதலுக் காக காத்திருக்கும் 10 கல்லூரிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கலந்தாய்வு தொடங்கும் தேதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நடப்பு கல்வியாண்டில் புதிய படிப்புகளுக்கு ஏப்ரல் 10-ம் தேதிக்குள் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால், ஏஐசிடிஇ ஒப்புதல் அளிப்பதில் இரண்டு மாதம் தாமதப்படுத்தியதால், அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் சேர முடியாத தமிழகத்தைச் சேர்ந்த 10 பொறியியல் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவகீர்த்தி சிங் அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஏஐசிடிஇ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டபோது, "நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளிடம் இருந்து புதிய படிப்புகளுக்கு ஒப்புதல் கேட்டு இந்த ஆண்டு 7280 விண்ணப்பங்கள் வந்தன. இதில், 6750 விண்ணப்பங்களை பரிசீலித்து உச்ச நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் அனுமதி அளித்து விட்டோம். நிராகரித்தது போக, எஞ்சியுள்ள 529 கல்லூரிகளின் விண்ணப்பங்களை உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலிக்க முடியவில்லை. காலக்கெடுவை ஒரு வாரம் தளர்த்தினால், எஞ்சியுள்ள விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலித்து உத்தரவு பிறப்பித்து விடுவோம்" என்று குறிப்பிட்டார்.

நீதிபதிகள் உத்தரவு
அதைத் தொடர்ந்து 10 கல்லூரிகள் தரப்பிலும், அண்ணா பல்கலைக்கழகம் தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. அதே சமயம், ஒருவாரம் அவகாசம் அளித்தால், அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து ஒப்புதல் வழங்கி விடுவதாக ஏஐசிடிஇ கோருவதால், அவர்களுக்கு ஒருவாரம் அவகாசம் அளிக்கிறோம். வழக்கு தொடர்ந்துள்ள கல்லூரிகளுக்கு முன்னுரிமை அளித்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். அதன்பிறகு ஒருவாரம் அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது.

தேதியில் மாற்றம்
கலந்தாய்வு தொடங்குவதில் அதற்கேற்ப மாற்றம் செய்து கொள்ளலாம். முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதேபோல், இரண்டாம் கட்ட கலந்தாய்வை ஜூலை 28-ம் தேதிக்குள்ளும், கடைசி கட்ட கலந்தாய்வை ஜூலை 29-ம் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.

அடுத்த கல்வியாண்டு
ஆகஸ்ட் 1-ம் தேதி அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் தொடங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கலந்தாய்வு ஒத்திவைப்பு
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கருத்தில் கொண்டு, வெள்ளிக் கிழமை (ஜூன் 27) முதல் தொடங்க இருந்த பொது கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது. திருத்தப் பட்ட புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.

1.2 லட்சம் மாணவர்கள்
கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது குறித்து முதல் மூன்று நாள்கள் கலந்து கொள்ள இருந்த சுமார் 10 ஆயிரம் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை முதன்மை செயலரிடம் கலந்து ஆலோசித்து புதிய கவுன்சலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராஜாராம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications