ஜெ. மரணம்.. அப்பல்லோ மருத்துவமனை ஆய்வை ரத்து செய்தது ஆணையம்.. ஏன்?
அப்பல்லோவில் நடைபெற இருந்த ஆய்வை ஆறுமுகசாமி ஆணையம் திடீரென ரத்து செய்தது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துமனையில் நடைபெற இருந்த ஆய்வை நேற்று இரவு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதால், அவரது மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுடன் சம்பந்தப்பட்ட அணைவரையும் விசாரித்து வருகிறது.
அந்த வகையில், ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அப்பல்லோ மருத்துமனையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மற்றும் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை அப்பல்லோ மருத்துமனைக்கு சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையை ஆய்வு செய்ய இருந்தனர்.
விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் சிகிச்சை அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறப்பு அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென வழக்கறிஞர்களின் ஆய்வை விசாரணை ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆய்வு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஆணைய வட்டாரத்தினர் கூறுகையில், அப்பல்லோ மருத்துவமனை, ஆணைய வழக்கறிஞர்கள் அங்கே ஆய்வு மேற்கொள்வதற்கு வசதியாக முன்னேற்பாடுகளை செய்யவில்லை. அதனால், ஆய்வை மற்றொரு நாளில் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் அதை ஏற்றுக்கொண்டு இன்று நடைபெற இருந்த ஆய்வுப் பணி ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.