ரூ. 28 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ஏ.டி.எம் கார் ஓட்டுனரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்!
28 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் வாகனத்தை கடத்திச் சென்ற ஓட்டுநரை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை : ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பச் சென்ற வேனில் இருந்த ர். 28 லட்சம் பணத்துடன் மாயமான ஓட்டுனரைப் பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னையில் உள்ள ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்ப தனியார் நிறுவனங்கள் ஒப்புதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காலையில் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அங்கு பணத்தை வாங்கிக்கொண்டு ஏ.டி.எம்.,களில் சென்று நிரப்பி வருவார்கள். அப்படிச் செல்லும் வாகனங்களில் வங்கி ஊழியர் ஒருவர், டிரைவர், துப்பாக்கி ஏந்திய காவலர் ஆகியோர் பணியில் இருப்பர்.

சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனம் சார்பில் பணம் நிரப்ப தனியார் வங்கி ஊழியர்கள் நேற்று சென்றனர். அதில் ஊழியர்கள் கருணாகரன், ராஜ்குமார், காவலர் கியாவூதின் ஆகியோர் இருந்தனர். வாகனத்தை ஓட்டுனர் உதயகுமார் ஓட்டிச் சென்றார்.
இறுதியாக சென்னை விமான நிலையத்திற்கு அருகே உள்ள கனரா ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்ப பிற்பகல் 3 மணியளவில் வந்தனர். அங்கு ஊழியர்கள் இருவரும் உள்ளே சென்று பணம் நிரப்பிக்கொண்டிருந்த நிலையில், கியாவூதின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக வாகனத்தை கிளப்பிச் சென்றார் ஓட்டுனர்.
மாயமான ஏ.டி.எம் வேனில் 28 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாயமான ஓட்டுனரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் உதயகுமார் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதால், அவரைப் பிடிக்கத் தனிப்படை தூத்துக்குடி விரைந்துள்ளனர் தனிப்படை போலீஸார். மூன்று நாட்களுக்கு முன்பு தான் தற்காலிக ஊழியராக உதயகுமார் பணியில் சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications