ரத்தம் சொட்டச் சொட்ட கமிஷனர் ஆபீஸுக்கு ஓடி வந்த ஹோட்டல் அதிபர்!
சென்னை மண்ணடியில் ஹோட்டல் அதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
Recommended Video
சென்னை: சென்னை மண்ணடியில் பெண் கொடுக்க மறுத்ததால் ஹோட்டல் அதிபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர், உடலில் ரத்தம் சொட்ட சொட்ட காவல் ஆணையர் அலுவகலத்திற்கும் புகார் அளிக்கவும் ஓடிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுது.
சென்னை மண்ணடியை சேர்ந்தவர் சையது இப்ராகிம். அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய மகளை அதே பகுதியை சேர்ந்த முகமது அஸ்லாம் என்பவர் பெண் கேட்டு வந்துள்ளார். தான், லண்டனில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறினார்.
இதனால் இப்ராகிம் தனது மகளை கொடுக்க சம்மதித்தார். இருந்தாலும் அஸ்லாம் பற்றி சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் அவர் குட்டு வெளிப்பட்டது. அவர் 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், பலபேரை மோசடி செய்துள்ளவர் என்றும் தெரியவந்ததையடுத்து இப்ராகிம் அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தனது மகளையும் அஸ்லாமுக்கு கொடுக்க பிடிக்கவில்லை என்பதால் திருமணத்திற்கு மறுப்பு சொல்லியுள்ளார்.
தன்னை பற்றிய விவரங்கள் தெரிந்துவிட்டதே என்ற அதிர்ச்சியையும், அவமானத்தையும் அஸ்லாம் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. அத்துடன், பெண்ணை தனக்கு கட்டாயமாக திருமணம் செய்து தந்தே ஆகவேண்டும், இல்லையென்றால் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று மிரட்ட தொடங்கியும் விட்டார். இதனால் இப்ராகிம் போலீசில் புகார் அளித்ததையடுதுது அஸ்லாம் கைது செய்யப்பட்டு புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இப்ராகிமை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இரும்புக்கம்பி, உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்க தொடங்கியது. இதில் இப்ராகிம் பலத்த காயமடைந்தார். உடலில் ரத்தம் சொட்ட சொட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்து, இது தொடர்பாக புகார் அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார், உடனடியாக இப்ராகிமை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அத்துடன் இப்ராகிம் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணையையும் கையிலெடுத்துள்ளனர்.