13 வயது சிறுமிக்கு ரகசிய திருமணம்.. நெல்லை அருகே பரபரப்பு.. அதிகாரிகள் விசாரண!
புளியங்குடி: நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே 13 வயது சிறுமிக்கு ரகசிய திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ளது தலைவனகோட்டை கிராமம். இவ்வூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் மணிகண்டன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள அவருக்கும் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 8ம் வகுப்பு படித்துள்ள 13 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதாக போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி, தென்காசி வட்டார குழந்தை நல அலுவலர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் மணிகண்டன் வீட்டுக்கு அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு பூப்புனித நீராட்டி விழா மட்டும் நடத்தியதாகவும், திருமணம் நடக்கவில்லை என்று இரு தரப்பு பெற்றோரும் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட சிறுமியிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அதிகாரிகள், 3 மாதம் கழித்து வருவோம், அப்போது சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்வோம். இதில் அவருக்கு திருமணம் செய்தது உறுதியானால் உங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இரு தரப்பு பெற்றோரிடமும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சிறுமி மைனர் என்பதால் 18 வயதுக்கு பின்னரே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் அறிவுறுத்தினர். சிறுமிக்கு 13 வயதிலேயே திருமணம் நடப்பதாக வெளியான தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.