இந்தியா உலகக் கோப்பையை வென்றால் 2 நாள் “ப்ரீ சவாரி” – சென்னை ஆட்டோ டிரைவர் அறிவிப்பு
சென்னை: சென்னை ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்தியா உலகக் கோப்பை ஜெயித்தால் 2 நாள் இலவச ஆட்டோ சவாரி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் மீது அளவுக்கு அதிகமான ஆர்வம் கொண்டிருக்கும் பலர் தங்களது பணிகளை துறந்து விட்டு, இன்று விடுமுறை போட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கி கிடப்பதுடன், திக்... திக்...மனநிலையிலேயே போட்டியை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் வரிசையில் சென்னை போரூரை சேர்ந்த ஆட்டோ டிரைவான முருகேசனும் இடம் பிடித்துள்ளார். கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டிருக்கும் முருகேசன் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மோகத்துடனேயே வளர்ந்த முருகேசன், பிளஸ் 2 வரை படித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட முருகேசன் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என கிரிக்கெட்டின் அத்தனை நுணுக்கங்களையும் கற்று ஆல் ரவுண்டராகவும் வலம் வருகிறார்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் பேட்டை கையில் தூக்கிக்கொண்டு மைதானத்துக்கு சென்று விடும் முருகேசன், இன்றைய அரை இறுதி போட்டியை பார்ப்பதற்காக ஆட்டோவுக்கு லீவு கொடுத்து விட்டார்.
தனது காதல் மனைவி சுகன்யா ராணியுடன் வீட்டில் அமர்ந்து கிரிக்கெட்டை ரசித்துக்கொண்டிருக்கும் முருகேசன், இந்திய அணி கோப்பையை வென்றால் 2 நாள் ஆட்டோ சவாரி இலவசம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது ஆட்டோவின் பின்னால் பேனர் ஒன்றையும் முருகேசன் கட்டி வைத்துள்ளார். ‘‘ஐ லவ் இந்தியா'' என்று எழுதப்பட்டுள்ள பேனரில், டோணி, கோஹ்லி ஆகியோரின் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன.