எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்
எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கான முயற்சிகளை எடுப்பேன் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு நிச்சயமாக நான் முயற்சி செய்வேன் என இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவினால் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சனிக்கிழமையன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நடிகர் அர்ஜுன், அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போது, எஸ்பி பாலசுப்ரமணியம் பல விருதுகளை பெற்றிருக்கிறார். அவருக்கு கண்டிப்பாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் இதே கருத்தினை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் நண்பரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன், எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு நிச்சயமாக நான் முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், பாரத ரத்னா விருது குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பதால் எஸ்.பி.பிக்கு புகழ் சேர்க்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கான முயற்சிகளை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications