நான் "அவரை" கேட்கிறேன்.. கொஞ்சம்கூட ஞானமே இல்லையே.. திமுக அமைச்சருக்கு எச்.ராஜா கிடுக்கிப்பிடி
திமுக அமைச்சர் சேகர்பாபுவை எச்.ராஜா விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் 38 ஆயிரத்து 667 கோவில் இருக்கின்றன என்று அமைச்சர் சேகர் பாபு சொல்றாரே? மற்ற 5454 கோவில்கள் எங்கே இருக்கின்றன" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எத்தனையோ மக்கள் நலத் திட்டங்கள் அதிரடியாக அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இந்த துறையிலும் இவ்வளவு அதிரடிகள் செய்ய முடியுமா என்று வியப்பு ஏற்பட்டு வருகிறது.
அதற்கேற்றார்போல், அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவின் நடவடிக்கைகள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது...

விமர்சனங்கள்
ஆனால் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மட்டும் தொடர்ந்து அறநிலைய துறையின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். ஒவ்வொரு முறை செய்தியாளர்களின் சந்திப்பின்போதும், அறநிலையத்துறை குறித்த புள்ளிவிவரங்களை முன்வைத்து கேள்வி எழுப்பியும் வருகிறார். அந்தவகையில், சீர்காழி அருகே ஒரு விழாவில் கலந்து கொண்ட எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..

மத்திய அரசு
அப்போதும் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.. இந்த முறை நேரடியாகவே அமைச்சர் சேகர்பாபுவின் திட்டங்களை, அறிவிப்புகளை, மற்றும் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். எச்.ராஜா சொன்னதாவது: "மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் விலை ரூ.5 டீசலுக்கு ரூ.10 குறைத்துள்ளது... மத்திய அரசு தனது கலால் வரியை குறைத்துள்ளது... பாஜக ஆளும் 9 மாநிலங்களில அரசுகள் குறைத்துள்ளது... ஆனால் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று சொல்லி ஆட்சியை பிடித்த ஊராட்சி அரசு தனது மாநில அரசு வரியை குறைத்து தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.

அபகரிப்பு
கோவில் அபகரிப்பில் திமுக அரசு ஈடுபட்டுவருகிறது... ஆட்சிக்கு வந்து இந்த ஐந்தரை மாதங்களில் பல்வேறு கோவில்களை அரசு எடுத்து கொண்டுவிட்டது.. அறநிலையத்துறை சட்டம் 1953இன் படி செயல்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொல்றார்.. அறநிலையத் துறை ஒரு கோவில் சரியாக நிர்வாகம் செய்யப்படவில்லை என்றால் எடுத்து சரிசெய்து அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் பழைய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

கபளீகரம்
ஆனால் 60 ஆண்டுகள் 70 ஆண்டுகள் கோவிலை அபகரித்துக்கொண்டு நகைகளை கபளிகரம் செய்யக் கூடாது... அதனால் சட்டப்படி அறநிலையத் துறை கோவில்களை எடுத்துக்கொள்ள முடியாது... அறநிலையத்துறையின் கீழ் எத்தனை கோவில்கள் இருக்கிறது தெரியுமா? அமைச்சர் அதுகூட தெரியாத நிலையில் உள்ளார்... நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வழக்கறிஞர் கார்த்திகேயன் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளதாக அப்போது கோர்ட்டில் தெரிவித்தார்..

போராட்டம்
ஆனால், சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர் பாபு 38 ஆயிரத்து 667 கோவில் இருக்கு என்று சொல்கிறார்.. அப்படின்னா, மற்ற 5454 கோவில்கள் எங்கே இருக்கின்றன. துறை ரீதியான ஞானம் கூட இல்லாதவராக அந்த துறை அமைச்சர் இருக்கிறார்.. அறநிலையத்துறை தனது வரம்புமீறி செயல்படுகிறது... கோவில்களை அறநிலையத்துறை அரசு எடுத்துக் கொள்வதை நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications