தமிழகத்தில் திமுக.. பாஜகவின் தென் இந்தியா 'லோக்சபா ஆபரேஷன்' திட்டம்
சென்னை: 2019ம் ஆண்டு, லோக்சபா தேர்தலில், தென் இந்தியாவில் அதிக தொகுதிகளை வெல்ல பாஜக பல திட்டங்களோடு களமிறங்கியுள்ளது.
அதில் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதும் ஒரு முக்கிய திட்டமாகும்.
கடந்த லோக்சபா தேர்தலை போல இம்முறை, பாஜகவால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்று மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே டிரெண்ட்டைதான், பல மீடியாக்களின் கருத்து கணிப்புகளும், தெரிவிக்கின்றன.
அதிலும் குறிப்பாக, வட இந்தியாவில் கடந்த முறையை விட இம்முறை பாஜக செல்வாக்கை இழக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கடந்த முறை கம்மி
இந்த நிலையில்தான், தென் இந்தியா மீது தீராத தாகம் கொண்டு வியூகம் வகுக்கிறது பாஜக. கடந்த லோக்சபா தேர்தலின்போது, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் மொத்தமுள்ள 130 தொகுதிகளில், 20 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. இத்தனைக்கும் வட இந்தியாவில் பாஜக வரலாறு காணாத வெற்றியை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த தேர்தல் அது.
தெலுங்கானா கூட்டணி
ஆந்திராவில் பாஜக கூட்டணியில் இருந்த, தெலுங்கு தேசம் கட்சி, விலகிவிட்ட நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தியின் சந்திரசேகரராவோ, பாஜகவுடன் சற்று நெருங்கி வருகிறார். கர்நாடகாவை பொறுத்தளவில் பாஜக தனித்தே போட்டியிட திட்டமிட்டுள்ளது. பிற தென் மாநிலங்களில் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
காங்கிரசை பலவீனப்படுத்துவது
மேலும், தென் மாநிலங்களில் பாஜகவைவிடவும் பலமாக உள்ள காங்கிரசை பலவீனப்படுத்தவும், அக்கட்சியின் முக்கிய கூட்டணிகளில் குழப்பம் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. காங்கிரசின் பலவீனம் எங்களின் பலமாக மாறும் என்று கூறுகிறார் தென் மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர். தமிழகத்தில் திமுவுடன் கூட்டணி அமைப்பது பாஜகவின் முக்கியமான குறிக்கோளாக இருக்கப்போகிறது என்கிறார் அந்த பிரமுகர்.
சிறு கட்சிகள் தயவு
கேரளாவில் பாஜகவின், வாக்கு வங்கி அதிகரித்திருந்தாலும், வெற்றி பெற முடியவில்லை. எனவே அங்கு சிறு கட்சிகள் துணையை நாடப்போகிறதாம் பாஜக. ஒடிசாவின் பிஜு ஜனதாதளம் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில், ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்குதான் அக்கட்சி வாக்களித்தது. எப்படியும் தென் இந்தியாவில் இம்முறை அதிக தொகுதிகளை வெல்ல வேண்டும், அப்படி வெல்வதுதான் லோக்சபா தேர்தல் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது என்பதில் பாஜக தெளிவாக உள்ளது.