பழனியில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 5 பேர் மீது பாஜகவினர் சரமாரி தாக்குதல் - ஒருவர் படுகாயம்
பழனி: பழனி முருகன் கோயில் அருகில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உட்பட 5 பேரை பாஜகவினர் சரமாரி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழனியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு, மரபணு விதையின் தீமைகள் பற்றியும், விவசாய நிலங்கள் கார்ப்பரேட்டுகளின் பினாமி சொத்துகளாக மாறுவதை கண்டித்தும் தமிழ்நாட்டில் தங்கள் குழுவுடன் சேர்ந்து 19 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்து முடித்துவிட்டு பழனி முருகனை தரிசிப்பதற்காக நேற்று மாலை சென்றார்.

5.00 மணிக்கு தனது சங்க உறுப்பினர்கள் 13 பேருடன் கோயிலுக்கு சென்றுவிட்டு 6.30 மணியளவில் மின் இழுவை ரயில் வழியாக கீழே இறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த பாஜக கட்சியினர் 15 பேர் அய்யாகண்ணு மற்றும் சங்க உறுப்பினர்களை திடீரென்று சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள், அய்யாகண்ணுவை மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். ஆனால் அப்போதும் ஆத்திரம் தீராத பாஜகவினர் காரின் மீது செருப்புகளை வீசியதுடன், அய்யாகண்ணு ஒழிக என்று கோஷமிட்டனர்.
இத்திடீர் தாக்குதலில் அய்யாக்கண்ணுவுடன் வந்திருந்த பிரகாஷ் 18, என்ற தஞ்சை மாவட்ட செய்தி தொடர்பாளர், காமராஜ் 62, விஜயகுமார் 50, ஆண்டவர் 45 போன்றோர் நிலைகுலைந்து போயினர். இதில் பலத்த காயமடைந்து மயங்கி சரிந்து விழுந்த பிரகாஷ் உடனடியாக மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து பழனி காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பாஜக பெண் ஒருவர் அய்யாக்கண்ணுவை அறைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications