ஹைதராபாத் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர்கள் விடுத்த மிரட்டலால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டலின் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். விமானத்தில் இருக்கும் குடிநீர் பாட்டிலில் வெடிகுண்டு மறைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் 20 விமானங்களை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சென்னை வரும் நிலையில் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.