மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மர்ம நபர் ஒருவன் 108க்கு நேற்று நள்ளிரவில் போன் செய்து மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இன்னும் சில நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டான். உடனே இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அண்ணா நகர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு இரவு 12.45 மணியில் இருந்து அதிகாலை வரை பேருந்து நிலையத்தில் குண்டுகள் ஏதாவது வைக்கப்பட்டுள்ளதா என்று தேடினர். ஆனால் குண்டுகள் எதுவும் இல்லாததை தெரிந்த பின்னர் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதற்கிடையே வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்வதை அறிந்த பயணிகள் பேருந்து நிலையத்தை விட்டு ஓடினர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒருவர் 108க்கு போன் செய்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் குண்டு வெடிக்கும் என்று கூறினான். போலீசார் விசாரணை நடத்தி அந்த நபர் சென்னையை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications