திருச்சி பாஜக மாநாட்டு மேடைக்கு வெடி குண்டு மிரட்டல்...
திருச்சி: திருச்சியில், இன்று நடக்கும் பாஜக இளம் தாமரை மாநாட்டு மேடையில் வெடிகுண்டு வெடிக்கும், என நேற்று இரவு போன் மூலம் மிரட்டல் வந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில், இன்று மாலை பா.ஜ.க சார்பில் இளம் தாமரை மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பா.ஜ.க மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, மேடை, போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு, 7.30 மணிக்கு, பொன்மலை உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, மர்ம போன் வந்தது. அதில் பேசியவர், பாஜக மேடையில் வெடிகுண்டு வெடிக்கும்; இதை யாரும் தடுக்க முடியாது என் கூறியுள்ளார்.
போனை எடுத்து பேசிய, சிறப்பு எஸ்.ஐ., தங்கவேலு, நீங்கள் யார்? எனக் கேட்டதற்கு, குண்டு வைக்கப் போகிறவன் எனக் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
உடனடியாக, மர்ம நபர் பேசிய போன் எண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டனர். வில் போன் இணைப்பில் உள்ள, 4442068 எண்ணில் இருந்து மர்ம நபர் பேசியதை, போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அந்த எண் யாருடைய பெயரில் உள்ளது, என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் மேலும் மாநாட்டு மேடைக்கு, போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.