அண்ணனுடன் தண்ணி அடித்ததைத் தட்டிக் கேட்ட அண்ணியைக் கொன்ற வாலிபர்.. தானும் தற்கொலை!
சிதம்பரம்: சிதம்பரம் அருகே தனது அண்ணனுடன் உட்கார்ந்து வீட்டுக்கு வெளியே மது அருந்தியுள்ளார் ஒரு தம்பி. இப்படியா இருவரும் சேர்ந்து குடித்துக் கெடுவீர்கள் என்று அதைத் தட்டிக் கேட்டுள்ளார் அண்ணி. இதனால் கோபமடைந்த தம்பி, தனது அண்ணியை அடித்துக் கொன்று விட்டார். பின்னர் வேதனையில் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடஹரிராஜபுரத்தைச் சேர்ந்த சந்திரகாசி மகன் கோதண்டபாணி (39), விஜயகுமார் (32). இருவரும் குவைத்தில் வேலைபார்த்து வருகினறனர். சில மாதங்கள் முன்பு ஒன்றன், பின் ஒன்றாக இருவரும் சொந்த ஊரான வடஹரிராஜபுரத்திற்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் புதன்கிழமை அண்ணன், தம்பி இருவரும் வீட்டின் வெளியே மதுகுடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அண்ணன் மனைவி ராஜலட்சுமி (30) கணவரை உள்ளே வருமாறு அழைத்துள்ளார். மனைவி கூப்பிடுவதை பொருட்படுத்தாத கோதண்டபாணி, இன்னும் சிறிது நேரம் கழித்து வருவதாக கூறியுள்ளார்.
இப்படிக் குடித்துக் கெடுகிறீர்களே என்று வேதனைப்பட்ட ராஜலட்சுமி, தனது மைத்துனரையும் திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. ஆத்திரமடைந்த விஜயகுமார் அருகே இருந்து மண் அள்ளும் இரும்பு கரண்டியால் ராஜலட்சுமியை தாக்கியுள்ளார். இதில் ராஜலட்சுமி தலைமையில் பலத்த காயமுற்று ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜலட்சுமி இறந்தார். இதனை கேள்விப்பட்ட விஜயகுமார் ஆற்றங்கரையோரம் உள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த போன ராஜலட்சுமிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தூக்குப் போட்டுக் கொண்ட விஜயகுமாருக்கு கடந்த 4ம் தேதிதான் திருமணம் நிச்சயமானது என்பது குறிப்பிடத்தக்கது.