ஜெ. உடல்நிலை பற்றி பேசினாலே கைது... கோவை வங்கி ஊழியர்களுக்கு நேர்ந்த விபரீதம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் மட்டுமல்ல சும்மா பேசிக் கொண்டிருந்தாலே இனி சிறைவாசம்தான்... இப்படி பேசிக் கொண்டிருந்ததால்தான் கோவை வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக அதிமுகவினர் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் கோவை வங்கி ஊழியர்கள் இருவரும் அடக்கம்.
கோவை அதிமுகவைச் சேர்ந்த புனிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியது மற்றும் முதல்வரை தரக்குறைவாக பேசியது என்ற புகார்களின் அடிப்படையில் வங்கி ஊழியர்களான ரமேசும் சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது கோவை தொண்டாமுத்தூரில் உள்ள கனரா வங்கிக்கு புனிதா சென்றுள்ளார். அங்கு தமக்கு தெரிந்த ஒருவரிம் தாம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு போட்டியிடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலலிதாவின் உடல்நிலை குறித்தும் பேசியுள்ளனர்.
இந்த பேச்சுகளின் போது வங்கி ஊழியர்களான ரமேஷும் சுரேஷும் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சில கருத்துகளை கூறியுள்ளனர். இதனால் அவர்களுடன் புனிதா தகராறு செய்திருக்கிறார். இதையடுத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக இருவர் மீது புனிதா போலீசில் புகார் கொடுத்தார்.
இப்புகாரின் அடிப்படையில்தான் தற்போது வங்கி ஊழியர்கள் ரமேஷும் சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக வதந்தி பரப்பினால் மட்டுமல்ல.. இனி ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஏதாவது பேசினாலே கைது செய்யப்படுவீர்கள் என்பதை உணர்த்துகிறது கோவை 'அரெஸ்ட்'.