திண்டுக்கல் அருகே கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து... பாதிரியார் உள்பட 4 பேர் பலி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே லாரி மீது கார் மோதியதில் பாதிரியார் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 150-வது ஆண்டு திருவிழா ஆகஸ்டு 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக நாளை மறுநாள் (31-ந் தேதி) கொடியேற்றம் நடக்கிறது.
இந்நிலையில், திருவிழாவுக்கு பட்டாசு ஆர்டர் கொடுப்பதற்காக ஆலயத்தின் உதவி பங்கு தந்தை அருளப்பன் உள்பட 5 பேர் சிவகாசிக்கு காரில் சென்றுள்ளனர்.
பின்னர், ஆர்டர் கொடுத்துவிட்டு அவர்கள் 4 பேரும் அங்கிருந்து இன்று அதிகாலை கொடைக்கானல் திரும்பி கொண்டிருந்தனர். காரை மூஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த மாற்கு என்பவர் ஓட்டினார்.

விபத்து
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பாண்டியராஜபுரம் கார் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக வந்த வேகத்தில் கார் மோதியதாக கூறப்படுகிறது.

பாதிரியார் உட்பட 4 பேர் பலி
இந்தவிபத்தில், சலேத் அன்னை ஆலய உதவி பங்கு தந்தை அருளப்பன் (30), முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் சகாயராஜ் (45). சேசுராஜ் (45), மைக்கேல்( 55) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

ஒருவர் காயம்
காரை ஓட்டிவந்த மாற்கு என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, மாற்கு மதுரை அரசு மருத்துமனைக்கு சிசிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்

விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை போலீஸார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications