பரோட்டா வாங்கித்தராததால் நண்பனை கழுத்தை நெரித்துக் கொன்றேன்: தச்சு தொழிலாளி பகீர் வாக்குமூலம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பரோட்டா வாங்கிக் கொடுக்காததால் பெயிண்டர் ஒருவரை அவரது நண்பர் கொலை செய்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள சித்தன்குடியைச் சேர்ந்த சுந்தரராஜன் மகன் மணிகண்டன்(22). பெயிண்டர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சாரம் ஞானப்பிரகாசம் நகரில் இருக்கும் கழிவுநீர் வாய்க்காலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மணிகண்டன் மர்ம மரணம் அடைந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனையில் மணிகண்டன் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டன் வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவம் நடந்த அன்று இரவு மணிகண்டன் ஜீவானந்தபுரத்தைச் சேர்ந்த தனது நண்பர் வெங்கேடசன்(32) என்பவருடன் மது அருந்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தச்சு தொழிலாளியான வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது,
நானும், மணிகண்டனும் நெருங்கிய நண்பர்கள். நான் சொல்லும் வேலைகளை மணிகண்டன் தட்டாமல் செய்வான். சம்பவத்தன்று இரவு நானும், மணிகண்டனும் சுப்புராயப்பிள்ளை சத்திரம் பகுதியில் மது குடித்தோம். அப்போது நான் புரோட்டாவும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி தரும்படி கூறினேன். ஆனால் மணிகண்டன் வாங்கித்தர மறுத்து விட்டான். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எனது குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி தரக்குறைவாக பேசினான். இதனால் ஆத்திரம் அடைந்த நான் மணிகண்டனை கீழே தள்ளி அவனது கழுத்தை நெரித்தேன்.
இதில் மணிகண்டன் மயங்கி விழுந்தான். பின்னர் எழும்பவில்லை. மணிகண்டன் இறந்த விட்டான் என்று தெரிய வந்தது. எனவே நான் என்ன செய்வது என்று தெரியாமல் எனது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்தேன். அவர்கள் உதவியுடன் உடலை அங்கிருந்து கொண்டு சென்று ஞானப்பிரகாசம் நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்றேன். பின்னர் எதுவும் தெரியாது போல் இருந்தேன் என்றார்.
இதையடுத்து போலீசார் வெங்கடேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெங்கடேசனுக்கு உதவிய நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.