மள்ளர் நாடு அமைப்பின் செயலாளர் படுகொலை- பதற்றம்; போலீஸ் தடியடி
நெல்லை: நெல்லை அருகே மள்ளர் நாடு அமைப்பின் செயலாளர் மகேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை அருகே உள்ளது கொம்மந்தனூர் கிராமம். இவ்வூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருணம் செய்து கொண்டார். இவர் மள்ளர் நாடு என்ற ஆமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இவரது அமைப்பின் சார்பில் அவ்வப்போது போராட்டமும் நடத்தி வந்தார். இதன் காரணமாக இவருக்கும், பல்வேறு தரப்பை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மாலை மகேஷ் வீட்டில் இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய அவரது நண்பர் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக பேச வேண்டும் என அழைத்துள்ளார். மேலும் ஒரு நிலத்தை முடிந்து கொடுத்தால் அதில் அதிக அளவு கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மகேஷ் உடனே பைக்கில் பாளையங்கோட்டை புறப்பட்டார். அவரது வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சராமரியாக வெட்டியது.
இதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெல்லை சரக 'டிஐஜி சுமித் சரண் விசாரணை நடத்தினார்.
மகேஷ் கொலையை அடுத்து நெல்லையிலிருந்து கீழப்பாட்டத்திற்கு வந்த தனியார் பஸ் மற்றும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனம் மீது சிலர் கல் வீசி தாக்கினர். இதையடுத்து அங்கு விரைந்த வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேர பஸ்கள் அனைத்தும் உடனடியாக அந்த வழியாக செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications