காவிரிக்காக மாபெரும் போராட்டக்களம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை.. அழைப்பு விடுக்கும் ஸ்டாலின்
காவிரி வரைவு திட்டத்தை உருவாக்கவில்லை என்றால் தமிழகத்தில் பெரிய போராட்டம் களம் அமைக்க வேண்டிவரும் என்று ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: காவிரி வரைவு திட்டத்தை உருவாக்கவில்லை என்றால் தமிழகத்தில் பெரிய போராட்டம் களம் அமைக்க வேண்டிவரும் என்று ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். காவிரி வாரியம் அமைக்காமல் மத்திய அரசு பச்சை துரோகம் செய்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம், ஆனால் காவிரிக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்றும் கூறியது. இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறது.
இதுகுறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில் மத்திய அரசு வரைவு திட்டத்தை சமர்பிக்க இன்னும் 10 நாட்கள் அவகாசம் கேட்டது. இந்த விஷயம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தற்போது திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். காவிரி வாரியம் அமைக்காமல் மத்திய அரசு பச்சை துரோகம் செய்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் தனது பேட்டியில் ''தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும்.காவிரிக்காக மாபெரும் போராட்டக்களம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை.மத்திய அரசின் துரோகம் தொடருமானால் போராட்ட களம் அமைக்க நேரிடும்.'' என்றுள்ளார்.
மேலும் ''4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட வேண்டும். நீதிமன்ற உத்தரவை இழுத்தடிக்கும் செயலை கர்நாடக அரசு தவிர்க்க வேண்டும்.மத்திய அரசு போல கர்நாடகாவும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நடந்து கொள்ள கூடாது.'' என்றுள்ளார்.
அதேபோல் ''பிரதமரிடம் ஒப்புதல் வாங்க முடியவில்லை என்பதெல்லாம் சுத்த பொய்.தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் பிரதமரிடம் ஒப்புதல் பெற முடியவில்லையா?.இதெல்லாம் தமிழகத்தை ஏமாற்றும் செயலின் தொடர்ச்சியே.மே 8ம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்காலம். இல்லையென்றால் போராட்டத்தில் குதிக்க வேண்டியதுதான்'' என்று ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.