காவிரி விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு.. டிஜிபி, கமிஷனருடன் ஜெயலலிதா அவசர ஆலோசனை
சென்னை: காவிரி பிரச்சினையால் தமிழகத்தில் வன்முறை சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகிய உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பெங்களூரில் தமிழக இளைஞர் தாக்கப்பட்டதற்கு எதிர்வினை தமிழகத்தில் வெடிக்கும் என தமிழ் மற்றும் திராவிட அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்தன. சீமானின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ராமேஸ்வரத்தில் கன்னட வேன் டிரைவரை அடித்தனர். வேனை நொறுக்கினர்.
சென்னையில், உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசினர். வளசரவாக்கத்தில், உடுப்பி ஹோட்டலை மூட வைத்தனர் நாம் தமிழர் கட்சியினர். பதற்றம் காரணமாக இரு மாநிலங்கள் நடுவே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை டிஜிபி (பொறுப்பு) ராஜேந்திரன் இன்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜும் சந்திப்பின்போது உடனிருந்தார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.