நிர்மலாதேவி வழக்கு: மதுரை காமராஜர் பல்கலை உதவிப்பேராசிரியர் முருகன் கைது
நிர்மலாதேவி வழக்கு விவகாரத்தில் தொடர்புடைய உதவிப்பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.
Recommended Video

மதுரை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய பேராசிரியை நிர்மலாதேவியின் நண்பர் உதவிப்பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்வதற்காக மூளைச்சலவை செய்யும் வகையில் பேராசிரியை நிர்மலாதேவி பேசிய ஆடியோ வெளியானது. மாணவர்கள், மகளிர் அமைப்பினரின் போராட்டத்தை அடுத்து கடந்த 17ஆம் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து அவரை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது சிபிசிஐடி போலீஸ். முதல்நாள் விசாரணையின்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி தெரிவித்தார்.
நிர்மலா தேவி கூறிய இருவரும் தலைமறைவானார்கள். தலைமறைவாக இருக்கும் காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மற்றும் உதவிப் பேராசிரியர் முருகனைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே தலைமறைவான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை தேடி அவரது சொந்த ஊரான திருச்சுழி அருகில் உள்ள நாடாகுளம் கிராமத்திற்கு சென்று சிபிசிஐடி காவல்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே இன்று காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் கையெழுத்து போட வந்த முருகனை மறைந்திருந்த சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடைபெறும் விசாரணையில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் வெளியாகும் என்று தெரியவருகிறது.












Click it and Unblock the Notifications