நிர்மலாதேவி வழக்கு: உதவிப்பேராசிரியர் முருகனிடம் சிபிசிஐடி விசாரணை
நிர்மலாதேவி வழக்கு விவகாரத்தில் தொடர்புடைய உதவிப்பேராசிரியர் முருகனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Recommended Video
மதுரை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய பேராசிரியை நிர்மலாதேவியின் நண்பர் உதவிப்பேராசிரியர் முருகனிடம்சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்வதற்காக மூளைச்சலவை செய்யும் வகையில் பேராசிரியை நிர்மலாதேவி பேசிய ஆடியோ வெளியானது. மாணவர்கள், மகளிர் அமைப்பினரின் போராட்டத்தை அடுத்து கடந்த 17ஆம் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
சிறையிலிருந்து அவரை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது சிபிசிஐடி போலீஸ். முதல்நாள் விசாரணையின்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி தெரிவித்தார்.
நிர்மலா தேவி கூறிய இருவரும் தலைமறைவானார்கள். தலைமறைவாக இருக்கும் காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மற்றும் உதவிப் பேராசிரியர் முருகனைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனிடையே தலைமறைவான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை தேடி அவரது சொந்த ஊரான திருச்சுழி அருகில் உள்ள நாடாகுளம் கிராமத்திற்கு சென்று சிபிசிஐடி காவல்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் கையெழுத்து போட வந்த முருகனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்தனர். இதனை ஏற்று விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் முருகன் ஆஜரானார்.
முருகனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் வெளியாகும் என்று தெரியவருகிறது. ஏற்கனவே நிர்மலா தேவியுடன் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியைகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.