கேவலமான தொகையை ஒதுக்கி தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தும் மத்திய அரசு
வறட்சி நிவாரணமாக சொற்ப தொகையை அறிவித்து மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்துள்ளது.
சென்னை: வறட்சி நிவாரணமாக சொற்ப தொகையை அறிவித்து மத்திய அரசு தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தியுள்ளது. சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு கேட்டிருந்த நிலையில் வெறும் 1748 கோடி ரூபாயை மத்திய அரசு அறிவித்திருப்பது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 141 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள் தண்ணீரின்றி வறண்டு போயுள்ளதால் விவசாயம் பொய்த்து விட்டது.
காவிரிப்பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நீரின்றி பயிர்கள் கருகியதைக் கண்டு மாரடைப்பாலும், கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்துகொண்டும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.
ரூ.39,565 கோடி கேட்ட தமிழக அரசு
இதைத்தொடர்ந்து மத்தியக் குழு கடந்த ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போதே மத்தியக்குழு முறையாக ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
ரூ.39,565 கோடி கேட்ட தமிழகம்
இதனிடையே தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் வறட்சி நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு மத்திய அரசிடம் 39,565 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்கும்படி கேட்டது
ரூ.2,096.80 கோடி வழங்க பரிந்துரை
இந்நிலையில் தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த மத்தியக் குழு, வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு 2,096.80 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு நேற்று பரிந்துரை செய்தது. அதே நேரத்தில் தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி 1,748.28 கோடி ரூபாய் மட்டுமே தர பரிந்துரைத்தது.
ரூ.1748 கோடி தர ஒப்புதல்
இந்த தொகைகள் மிகவும் குறைவு என எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் இந்த தொகை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதாது என்றனர். இந்நிலையில் தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி பரிந்துரைத்த 1748 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அவமானப்படுத்திய மத்திய அரசு
இந்த சொற்ப தொகையை வழங்கி மத்திய அரசு தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தொகையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.