காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தம் ரத்தாகிறது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. டி.கே. ரங்கராஜன் இன்று மீத்தேன் வாயு எடுப்பதற்கு அளிக்கப்பட்ட உத்தரவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை மனு காவேரி டெல்டா விவசாயிகள் சங்கத்திடமிருந்து அரசுக்கு கிடைத்துள்ளதா? அப்படி கிடைத்திருந்தால் அதன் மீது அரசின் நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து கூறியதாவது:
காவிரி டெல்டாவில் உத்தேசிக்கப்பட்டுள்ள மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரதமருக்கு எழுதப்பட்ட முறையீடு தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் மூலம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பெறப்பட்டுள்ளது.
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிட்டெட் நிறுவனத்தினருக்கு மீத்தேன் எடுப்பதற்கு தமிழ்நாட்டில் மன்னார்குடி ஏரியாவில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அனுமதியளிக்கப்பட்டது.
இந் நிறுவனம் தேவையான ஆவணங்களை இதுநாள் வரை சமர்ப்பிக்கவில்லை. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நினைவூட்டப்பட்ட பிறகும் அந்நிறுவனம் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.
இதற்கான காலம் 3.11.2013 அன்றோடு முடிந்துவிட்டது. ஒப்பந்தக்காரர் இந்தப் பகுதியில் மீத்தேன் எடுக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை.
ஒப்பந்த ஷரத்துகளின்படி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications