குற்றாலத்தில் சுற்றுலாப் பயணியிடம் தங்க செயின் பறித்த இளைஞர் கைது
நெல்லை: குற்றாலஅருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் சுற்றுலாப் பயணியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல அருவிகள் உள்ளன. அதில் குற்றாலம் மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன். தற்போது சீசன் காலம் முடியும் நிலையில் உள்ளது.

குறைவாக தண்ணீர் விழுந்தாலும் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் விருத்தாசலத்தை சேர்ந்த தபால் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த் யுவராஜ் என்பவர் குடும்பத்தோடு குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை யாரோ பறித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட அவர் வெளியே வந்து சப்தம் போட்டுள்ளார்.
அப்போது ஒரு இளைஞர் ஓடியுள்ளார். அவரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் பாக்கெட்டில் தங்க செயின் இருப்பது தெரியவந்தது.

பின்னர் உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா என்பவரது மகன் முனியசாமி என்பது தெரியவந்தது. அவரை காவல் ஆய்வாளர் ஜமால் கைது செய்து அவரிடமிருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்தார்.












Click it and Unblock the Notifications