தன்னைவிட 5 வயது மூத்த பெண்ணுடன் காதல் – ஏமாற்றிய வாலிபருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை: சென்னையில் தன்னைவிட 5 வயது மூத்த காதலியை மணம் புரிய மறுத்த காதலருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பூந்தமல்லியை சேர்ந்தவர் சுந்தரி 28 வயதானவர். அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஜய் 23 வயதானவர். இவருக்கும் சுந்தரிக்கும் காதல் ஏற்பட்டது.
4 மாதங்களுக்கு முன்பு, நெற்றியில் குங்குமம் வைத்து, உன்னை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று சாமி படத்துக்கு முன்பு சத்தியம் செய்து, சுந்தரியுடன் விஜய் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால், சுந்தரி கர்ப்ப மடைந்தார். இதையடுத்து தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி சுந்தரி கேட்ட போது, அதற்கு விஜய் மறுத்து விட்டார்.
இதுகுறித்து திருமங்கலம் போலீசில் சுந்தரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை கோர்ட்டில், விஜய் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுந்தரியை விஜய் திருமணம் செய்துக் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என்று அரசு வக்கீல் ஜெகன் வாதிட்டார். ஆனால், விஜய் தரப்பில் திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.