ஓ.பி.எஸ் கையை வெட்டுவேன் என்று மிரட்டிய வி.பி. கலைராஜனுக்கு முன்ஜாமீன்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை கையை வெட்டுவேன் என்று மிரட்டிய வி.பி. கலைராஜனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று கூறியது தொடர்பான புகாரில் சசிகலா ஆதரவாளரான வி.பி. கலைராஜனுக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக இரண்டாக பிளவு பட்டது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையில் ஒரு பிரிவினரும், சசிகலா தலைமையில் மற்றொரு பிரிவினரும் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார் சசிகலா ஆதரவு முன்னாள் எம்எல்ஏவான கலைராஜன். அவரது இந்தப் பேச்சு தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாணவர் அணி இணை செயலாளரும் ஐகோர்ட் வழக்கறிஞருமான செல்லபாண்டியன் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் கலைராஜன் மீது கொலை மிரட்டல் , பொது மக்கள் மத்தியில் பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், விரைவில் கலைராஜனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், தன்னை கைது செய்துவிடக் கூடாது என்பதற்காக கலைராஜன் தரப்பில் முன்ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் வி.பி. கலைராஜனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.