வேந்தர் மூவீஸ் மதனை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க சென்னை போலீஸ் முடிவு!
சென்னை: வேந்தர் மூவீஸ் மதனை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க முடிவு செய்துள்ளது சென்னை போலீஸ்.
மதன் தலைமறைவாகி 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

'அவர் உயிரோடு இருக்கிறார்... ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ரகசியமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்' என்றெல்லாம் ஒரு பக்கம் தகவல்கள் பரவிக் கொண்டுள்ளன. இன்னொரு பக்கம் அவரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.. உயிருடன் உள்ளாரா என்பதும் தெரியவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.
அவரை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் கொடுத்த புகார் அடிப்படையில் ஒரு வழக்கும், மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாக ரூ.100 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக கொடுத்த புகார் அடிப்படையில் இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த 2 வழக்குகளையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 4 தனிப்படை போலீசார் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், வாரணாசி, நேபாளம் மற்றும் நெல்லை ஆகிய நகரங்களிலும் முகாமிட்டு தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
மதன் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற மதன் இதுவரை உயிரோடு இருப்பதாகவே தெரியவந்துள்ளது. மதனோடு அவரது உதவியாளர்கள் குணா, சுதிர் ஆகியோரும் காணாமல் போய்விட்டனர். அவர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள்.
மதன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மோசடி வழக்கில் மதனின் நெருங்கிய கூட்டாளியான விஜயபாண்டி (வயது 31) என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவான மதன் நேபாள நாட்டில் பதுங்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் உறுதியானதாக போலீஸ் விசாரணையில் தெரியவில்லை. இதனால் நேபாள நாட்டிற்கு செல்லும் திட்டத்தை போலீசார் கைவிட்டுவிட்டனர். விசாரணையில் மதன் இருக்கும் இடம் பற்றி உறுதியான எந்த தகவல்களும் போலீசாருக்கு இதுவரை கிடைக்கவில்லை.
எனவே மதனை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனை நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர். சர்வதேட போலீஸுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வெளிநாட்டு விமான நிலையங்களிலும் மதன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்.












Click it and Unblock the Notifications