குட்கா ஊழல்: டிஜிபி அலுவலகம் முற்றுகை- நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது- போலீசார் குவிப்பு
சென்னையில் டிஜிபி அலுவலகம் முற்றுகையிட போவதாக வந்த அறிவிப்பினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி ஜெ.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கண்டன பேரணியில் ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக டிஜிபி அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட போவதாக வந்த தகவலையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று வந்த பரபரப்பு வழக்கான குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறை சோதனையின்போது கிடைத்த டைரியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, டிஜிபி ராஜேந்திரன் மிக முக்கியமான குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ளநிலையில் திமுக சார்பில் இதற்கு கண்டன எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்று, டிஜிபி பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, டிஜிபி அலுவலகத்தையும் முற்றுகையிட போவதாக வந்த தகவலையடுத்து ஏராளமான போலீசார் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடைபெற்றுவிடக்கூடாது என பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து டிஜிபி அலுவலக வாயில்களும் மூடப்பட்டுள்ளதுடன், அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, மெரினாவிலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் டிஜிபி ராஜேந்திரனை பதவி விலக வலியுறுத்தி பிற அமைப்புகளும் இன்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியாகிஉள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.