மகிழ்ச்சி பொங்கட்டும்... நலமும் வளமும் பெருகட்டும்... முதல்வர் ஓ.பி.எஸ் பொங்கல் வாழ்த்து!!
பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி பொங்கி நலமும் வளமும் பெருகட்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி பொங்கி நலமும் வளமும் பெருகட்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களால் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் புதிய புதிய சாதனைகளை படைத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு விவசாயிகளுக்கும் தமிழர்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் ''உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழவர் மகிழும் பெருநாளாம் பொங்கல் திருநாளில், உண்டி கொடுத்து, உயிர் கொடுக்கும் உலகின் உன்னத தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்திடவும், விவசாய பெருமக்களின் வாழ்வு சிறக்கவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், சிறு குறு விவசாயிகளுக்கு விலை ஏதுமில்லாமலும் மற்ற விவசாயிகளுக்கு மானிய விலையிலும் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களுக்கு 4 சதவிகித மதிப்புக்கூட்டு வரி விலக்கு, விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள உழவர் மையங்கள், வேளாண் தொழிலாளர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் பொருட்டு வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டம், விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களுடன் தொகுக்கப்பட்ட விவசாய கையேடுகள், விவசாயிகள் தரமான, சான்று பெற்ற விதைகளை அதிகளவில் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில் 'அம்மா சீட்ஸ்' விதைகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை விவசாயப் பெருங்குடி மக்களின் நல வாழ்விற்காக செயல்படுத்தினார்கள். எனவே தான் உணவு தானிய உற்பத்தியில் புதிய புதிய சாதனைகளை தமிழகம் படைத்துள்ளது.
விவசாய உற்பத்தி பெருகிடவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வகுத்த வேளாண் திட்டங்களை, அம்மா அவர்கள் வழியில் செயல்படும் அரசு சீரிய முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications