அ.தி.மு.க - தே.மு.தி.க அடிதடியால் போர்க்களமானது ஆலந்தூர் மாநகராட்சி அலுவலகம்!
சென்னை: ஆலந்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தே.மு.தி.க.வினருக்கும் அங்கிருந்த அ.தி.மு.க.வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது.
அதிமுக எம்.எல்.ஏ வெங்கட்ராமன் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கு ரேசன் கார்டுகளை வழங்கினார். அப்போது, மேற்கு சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் காமராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மண்டல அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்தனர். அதற்குள் எம்.எல்.ஏ வெங்கட்ராமன் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அப்போது அங்கே கூடி இருந்த அ.தி.மு.க.வினர், என்ன பிரச்னைக்காக மனு கொடுக்க வந்தீர்கள் என தே.மு.தி.க.வினரிடம் கேட்டபோது இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சராமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் அங்கிருந்த 5 கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியே போர்களமாக காட்சியளித்தது.