அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்: போலீஸ் விசாரணையால் பரபரப்பு
தூத்துக்குடி: கழுகுமலை அரசு பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கழுகுமலை மட்டுமின்றி தெற்குகழுகுமலை, துலுக்கர்பட்டி, வேலாயுதபுரம், லட்சுமிபுரம், கொச்சிலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சாதி ரீதியாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கத்தியுடன் மாணவர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதுபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் புலித்தேவன் பிறந்தநாள் விழாவை பள்ளியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய 10 மாணவர்களை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இந்த நிலையில் நேற்று மாலை பிளஸ் 1 வரலாற்று பிரிவு மாணவர்கள் இரண்டு பேர் பிளஸ் டூ தொழிற்கல்வி மாணவர்களை முறைத்து பார்த்து கேலி பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து இருவகுப்பு மாணவர்களிடேயே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிளஸ் டூ மாணவர்கள் 6 பேர் சேர்ந்து வரலாற்று துறை மாணவர்கள் 2 பேரை தாக்கியுள்ளனர்.
பள்ளி வளாகத்தில் நடந்த மோதலை பார்த்த தலைமை ஆசிரியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கோவில்பட்டி தாசில்தார் ஜோதி, ஆர்.ஐ. பாலசுப்பிரமணியன், விஏஓ செல்வகுமார், கோவில்பட்டி ஏஎஸ்பி முரளிராம்பா, இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஜாதி அடிப்படையில் மாணவர்கள் மோதிக் கொண்டது தெரிய வந்தது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மாணவ, மாணவிகள் அனைவரையும் விளையாட்டு திடலில் உட்கார வைத்து ஏஎஸ்பி முரளிராம்பா அறிவுரை வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications