சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலி - தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்
கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கோவை : சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மரணமடைந்தவர்களுக்கு தலா. ரூ. 4 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

உடல்கள் மீட்பு
இதையடுத்து தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார்,தீயணைப்புத்துறையினர் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அப்புறப்படுத்தி சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
Recommended Video


5 பேர் மரணம்
இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அரசு பேருந்து ஓட்டுனர் சிவக்குமார், துளசிமணி (50), தாரணி (20) கல்லூரி மாணவி மற்றும் அடையாளம் தெரியாத ஒரு ஆண் மற்றும் பெண் பிணம் என இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 5 பேர் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

15 பேர் படுகாயம்
இடிபாடுகளில் சிக்கிய மேலும் 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5க்கும் மேற்பட்டோரின் நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கட்டிட இடிபாடுகள் விழுந்து பலருக்கும் கை கால்கள் உடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவாரண நிதி
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா. ரூ. 4 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா. ரூ.50000, சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா. ரூ. 25000 நிவாரணம் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications