அப்பல்லோவில் நடந்தது என்ன?.. வேல்முருகன் "எக்ஸ்க்ளூசிவ்" பேட்டி
சென்னை: அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தான் முதல்வர் ஜெயலலிதா குறித்து அங்கு தெரிந்து கொண்டது குறித்து நம்மிடம் பிரத்யேகமாகப் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவனைக்கு பல்வேறு தலைவர்களும் சென்று முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்தவண்ணம் உள்ளனர். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பலர் சென்ற நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகனும் அங்கு சென்று வந்தார்.
அதுகுறித்து ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திடம் அவர் பிரத்யேகமாக கூறுகையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற நான் அங்கு லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரை, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களைச் சந்தித்தேன். காபி கொடுத்து உபசரித்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்களுடன் பேசினேன்.
முதல்வர் உடல் நிலை நலமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தனர் என்று கூறினார் வேல்முருகன்.