ரூ. 1 கோடி பணத்துடன் காரில் வந்த காங்கிரஸ் பிரமுகர்.. கோவையில் பரபரப்பு.!
கோவை: கோவையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வந்த காரில் ரூ. 1 கோடி பணம் இருந்தது கைப்பற்றப்பட்டுள்ளது. அது கருப்புப் பணமா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது.
கோவை போலீஸுக்கு நேற்று மாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு கார் வந்து கொண்டுள்ளது. காரின் எண் இது. அந்தக் காரில் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சாய்பாபா காலனி போலீஸார் உஷாரடைந்தனர். கவுண்டம்பாளையம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகே சாலையில் சோதனையில் குதித்தனர். வருகிற கார்களையெல்லாம் சோதனையிட்டனர். அப்போது குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட கார் அங்கு வந்து சேர்ந்தது.
அந்தக் காரை ஓரம் கட்டி நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் கட்டுக்கள் கட்டுக் கட்டாக இருந்தன. அதை கைப்பற்றிய போலீஸார் காவல் நிலையம் கொண்டு போய் எண்ணிப் பார்த்தனர். அதில் ரூ. 1 கோடி இருந்தத.
அந்தக் காரில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரான என்ஜீனியர் ராதாகிருஷ்ணன் இருந்தார். இன்னொருவரும் இருந்தார். காரை ஓட்டி வந்தவர் செல்வம். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணத்துக்கு சரியான கணக்கு கூறப்படவில்லை. இதையடுத்து வருமான வரித்துறைக்குத் தகவல் போனது. அவர்களும் விரைந்து வந்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையின்போது இது தொழில்நிமித்தமாக எடுத்து வந்த தொகை என்று ராதாகிருஷ்ணன் கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கான சரியான ஆதாரத்தை ராதாகிருஷ்ணனால் கொடுக்க முடியவில்லை. இதையடுத்து பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையே, இன்னொரு பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அதாவது காரில் மொத்தம் ரூ. 3 கோடி பணம் இருந்ததாம். ஆனால் போலீஸார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது அது ரூ. 1 கோடி என்று கூறியுள்ளதாக சிலர் புகார் கிளப்பியுள்ளனர். அப்படியானால் ரூ. 2 கோடி பணம் என்ன ஆனது, எங்கே போனது என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications