எங்களுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி.. மற்றவர்கள் 3வது இடத்துக்குத்தான்.. எச்.ராஜா
காஞ்சிபுரம்: தமிழக லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக, பாஜக கூட்டணி இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. மற்ற கட்சிகள் அனைத்தும் 3வது இடத்துக்குத்தான் முட்டி மோதுகின்றன என்று சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் எச்.ராஜா கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் வந்த ராஜா அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி. கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் 60 சதவீதம் பேர் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் எனவும், நரேந்திர மோடி பிரதமராக விருப்பம் தெரிவித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது. காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு உதாரணமாக உள்ளது.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி, அதிமுக இடையேதான் போட்டி இருக்கும். மற்ற கட்சிகள் மூன்றாம் இடத்துக்கே போட்டியிடுகின்றன என்றார் ராஜா.