கரூரில் மணல் குவாரியை மூடக் கோரி போராட்டம்… நல்லகண்ணு உட்பட 400 பேர் கைது!
கரூர்: கரூரில் மணல் குவாரியை மூடக் கோரி போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட 400 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
விதிமுறைகளை மீறி மணல் குவாரி நடத்தப்பட்டு வருவதால் இயற்கை சார்ந்த பல்வேறு பிரச்சனை உருவாகி வருகிறது. மேலும் பல சட்டவிரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரூர் மாவட்டம், கடம்பன்குறிச்சியில் மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, இயக்குநர் கவுதமன் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். போராட்டம் நடத்திய நல்லகண்ணு உள்பட 400 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, விதிகளை மீறி குவாரிகளில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறினார்.