அத்தனை அமைச்சர்களும் ஆர்.கே.நகரில்.. இது ஜனநாயக விரோத செயல்... சிபிஐ பாய்ச்சல்
திருச்செங்கோடு: தமிழக அமைச்சர்கள் அத்தனை பேரும், துறை சார்ந்த அதிகாரிகளும் ஆர்.கே.நகரில் முகாமிட்டுள்ளனர். இது ஜனநாயக விரோத செயலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆர்.கே.நகரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஆர்.கே.நகரில் முகாமிட்டிருக்கிறார்கள்.

எந்தெந்த துறை அமைச்சர்களாக இருக்கிறார்களோ அந்த துறைகளை சார்ந்த அதிகாரிகளும் அங்கேதான் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் இன்றைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
தலைமைச் செயலகத்தில் எந்த அமைச்சரும் இல்லை. எந்த அதிகாரிகளும் இல்லை. அவர்கள் அனைவரும் ஆர்.கே.நகரில் தேர்தல் பணியை ஆற்றுகிறார்கள். இதனால் அரசு நிர்வாகம் பாதிக்கும். இது ஒரு ஜனநாயக விரோதமான செயலாகும் என்றார் முத்தரசன்.
அதிமுக ஆட்சிக்காலத்தில், இடைத் தேர்தல் வரும்போதெல்லாம் தலைமைச் செயலகத்தில் எந்த அமைச்சரும் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்குக் காரணம் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பணியில் அத்தனை அமைச்சர்களையும் ஈடுபடுத்துவதால்தான். தற்போது ஜெயலலிதாவே போட்டியிடும் தொகுதியிலும் அமைச்சர்கள் குவிந்து ஓட்டு வேட்டையாடி வருவதால் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications