ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்... கடைசி மீனவர் வரை தேடுவோம் - முதல்வர்
ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: ஓகி புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும், புயல் சேதங்களை சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரிக்கு 19 நாட்களுக்குப் பின்னர் வந்தார் பிரதமர் மோடி. குஜராத் சட்டசபை தேர்தல் காரணமாக வர தாமதமாகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் பிரதமர் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கினார்.
கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து 8 மீனவ கிராமங்களில் இருந்து வந்து இருந்த 25 மீனவப் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.

நிவாரண நிதி
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குமரி பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும், சேதங்களை சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

மீன்பிடி துறைமுகம்
குமரியில் நிவாரண பணிகளுக்கு ரூ. 747 கோடி மற்றும் நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.5,255 கோடி ஓதுக்க வேண்டும் எனக்கூறியுள்ளோம். மீனவர்களின் கோரிக்கையான குமரியில் கடற்படை நிலையம் ஒன்றை அமைக்கவும், அங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கவும், ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் வலியுறத்தியுள்ளேன்.

புயல் பாதிப்பு நிதி
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வடகிழக்குபருவமழையால் பாதித்த பகுதிகளில் சீரமைக்க 9302 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளோம். இது தொடர்பாக பிரதமரிடம் மனுவாக வழங்கியுள்ளோம். இதனை ஆய்வு செய்து முடிவு செய்வதாக கூறியுள்ளார்.

தேடும் பணி தொடரும்
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்ப ஏற்பாடு செய்வதாகவும் பிரதமர்கூறியுள்ளார். மீனவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் நிதி வழங்கப்படுகிறது. மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளால் போர்க்கால அடிப்படையில் தேடுதல் பணி நடக்கிறது.கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடும்பணி தொடரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.












Click it and Unblock the Notifications