தலித் இளைஞர் படுகொலை: ராமதாஸுக்கு முக்கியச் செய்தி இல்லையாம்?
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துவிட்டார். அத்துடன், அது முக்கியச் செய்தி அல்ல என்று கூறும் தொனியில் அவர் புறப்பட்டுச் சென்றார்.
உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி சங்கர், கவுசல்யா ஆகியோரை பட்டப்பகலில் பல பேர் முன்னிலையில் மூன்று பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சங்கர் பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயமடைந்த கவுசல்யா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சாதி மறுத்து தலித் இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் கவுசல்யாவின் தந்தை, இந்த படுகொலைகளை ஆள் வைத்து செய்ததாகச் சொல்லி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.
இந்நிலையில் வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ராமதாஸ். அரசியல், தேர்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளிக்கு அப்போது அவர் பதிலளித்தார்.
அவரிடம் செய்தியாளர் ஒருவர் "நேற்றைய தினம் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடியை பட்டப்பகலில் மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. தமிழகத்தில் இதுமாதிரியான கவுரவக் கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது குறித்து உங்கள் பதில் என்ன?" கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராமதாஸ், "எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்...இப்ப போனதெல்லாம்... சொன்னதெல்லாம் சொல்லுங்க... போடுங்க. அப்புறம்.. அதப் பத்தி பேசலாம்" என்று செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து எழுந்து கிளம்பினார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications