"தொலைச்சுருவேன்".. டெய்லி 500 பேர் மிரட்டுகிறார்கள்.. போலீஸில் போய் குமுறிய சி.வி. சண்முகம்!
அமைச்சர் சிவி சண்முகம் சசிகலா மீது புகார் தந்துள்ளார்
திண்டிவனம்: "சசிகலாவின் தூண்டுதலின்பேரில் அவரின் ஆதரவாளர்கள் 500 பேர் என்னைத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர்... அவர்கள் என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்... இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் சண்முகம் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் திண்டிவனம் ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது: நான் கடந்த 7ம் தேதி அரசியல் ரீதியாக சசிகலா குறித்து சில கருத்துகளை ஊடகம் வாயிலாக பேட்டி அளித்தேன்.

புகார்
அதற்கு சசிகலா நேரடியாக பதில் அளிக்காமல் தன் அடியாட்களை வைத்து கைபேசி மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக அசிங்கமாகவும், அநாகரிகமாகவும் பேசி பதிவு செய்து வருகிறார்கள். மேலும் கைபேசியில் என்னை அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

செல்போன்
இன்றுவரை 500 பேருக்கு மேல் சமூக ஊடங்களில் என்னைப்பற்றி அநாகரிகமாக பதிவு செய்துள்ளனர்.. மேலும் தொடர்ந்து என்னுடைய கைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். சசிகலாவை பற்றி பேசினால் உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்கள்.

கொலை மிரட்டல்
இந்த கொலை மிரட்டல் மற்றும் அநாகரிக செயல்பாடுகளுக்கு சசிகலாவின் தூண்டுதல்தான் காரணம். எனவே கொலை மிரட்டல், ஆபாச பேச்சுக்களை பதிவு செய்ய காரணமான சசிகலா மற்றும் என்னுடைய கைபேசிக்கு போன் செய்த மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பாளர்கள்
சசிகலாவின் தீவிர எதிர்ப்பாளர்களில் முக்கியமானவர் மாஜி அமைச்சர் சிவி சண்முகம்.. சசிகலா ஜெயிலில் இருந்து வரும்போது, அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னவர் இவர்தான்.. அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று டிஜிபியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார் தந்தபோது, அதில் முன்னணியில் சென்றவரும் இவர்தான்.

கருவாடு
2 நாளைக்கு முன்புகூட, "கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது... ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று மார்தட்டியவரும் இவர்தான்..இப்போது தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று சொல்லி, ஸ்டேஷனில் புகார் தந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications