ஜெ.வின் விரோதிகளை தோற்கடியுங்கள்... தினகரனை குறித்து வைத்து தீபா தீவிரப் பிரச்சாரம்
ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவின் விரோதிகளை தோற்கடியுங்கள் என்று டிடிவி தினகரனை குறித்து வைத்து தீபா தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா போட்டியிடுகிறார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் தீபா, சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனை குறித்து வைத்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களை அடையாளம் கண்டு தோற்கடியுங்கள் என்று வாக்காளர்களிடம் கோரி வருகிறார்.

ஆர்.கே. நகர் தொகுதியில் திறந்தவெளி ஜீப்பில் நேரு நகர் பகுதியில் தீபா பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
ஜெ. வார்த்தைகளின்படி
"மக்களால் நான் மக்களுக்காக நான்" என்ற ஜெயலலிதாவின் வார்த்தைகளின்படி செயல்படுவேன். ஆர்.கே.நகர் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன். அவர் விட்டுச் சென்ற பணிகளை ஆற்றுவேன்.
நாகரிகமற்ற பேச்சு
என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறியிருக்கிறார். இது நாகரிகமற்ற பேச்சு. இதற்கெல்லாம் அஞ்சாமல் மக்கள் பணி ஆற்றுவேன்.
விரோதிகள்
அதிமுக யாருடைய கையிலும் சிக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைத்தாரோ அவர்களே இன்று கட்சியை நடத்தி வருகின்றனர். சில காலம் அவர்களோடு இருந்தவர்களும் இன்று ஓட்டு கேட்டு இங்கு வருகிறார்கள். அவர்களின் உண்மை முகத்தை நான் வெளிப்படுத்துவேன்.
அம்மாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வருவேன். ஜெயலலிதாவின் விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடித்து ஆர்.கே.நகரில் படகு சின்னத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தீபா கூறினார்.












Click it and Unblock the Notifications