பிரேமலதா விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஹைகோர்ட்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மீது அதிமுகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நாடாளுமன்ற தேர்தலின்போது திருப்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து கடந்த ஏப்ரல் 14-ந் தேதி பிரசாரம் செய்தேன். அப்போது கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நான், ‘ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை வழங்காமல் அமைச்சரின் உறவினர்களுக்கும், அவருக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டேன்.
இது குறித்து கோபிச்செட்டிப்பாளையம் நகர அதிமுக செயலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் என் மீதும், என் கட்சிக்காரர் கிருஷ்ணசாமி மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், எங்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 504 (அவதூறாக பேசி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல்), 505(1)(பி) (வேண்டுமென்றே தவறாக சித்தரித்து பேசுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இதனடிப்படையில் கோபிச்செட்டிப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் என்னை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. அரசியலமைப்பு சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பேச்சுரிமையை பறிக்கும் விதமாக இந்த வழக்கு எங்கள் மீது தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது,
மனுதாரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். வழக்கு விசாரணைக்கு மனுதாரர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications