டீமானடைசேஷன் என்பது தோல்வி அல்ல... பெருந்தோல்வி!
சென்னை: டீமானடைசேஷன் என்பது தோல்வி (failure) அல்ல, பெருந்தோல்வி (fiasco). இதை நாம் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தோம். தேச விரோதியாகத் தெரிந்தோம். இப்போது பாரத ரிசர்வ் வங்கியே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது, ரூ 5000 ப்ளஸ் கோடிகள் நஷ்டத்துடன்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் சில உள்ளது. குறிப்பாக ஐடியில் வேலை செய்யும் இளைஞர்கள்.

அமர்த்தியா சென், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோர்தான் பொருளாதார நிபுணர்கள். ஆர்.ஜே.பாலாஜியும், ஜெயமோகனும், அவர்களைப் போன்றவர்களும் வெறும் ஜால்ரா நிபுணர்கள்.
ஃபோட்டோஷாப்பில் எல்லாமே அழகாகத் தெரியும். ஆனால் அது குஜராத்தா, சைனாவா என ஒரு நொடி இணையத்தில் சரிபார்த்து நண்பர்களிடையே பரப்பினால் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது.
வளர்ச்சி என்பதும், முன்னேற்றம் என்பதும் மந்திரத்தில் காய்க்கும் மாங்காய்கள் அல்ல. எல்லாம் இப்போதே, உடனே நடக்கவேண்டும் என்ற பேராசையில் ஆசைகாட்டி மயக்கும் மந்திரவாதிகளை ஆதரித்தால் வளர்ச்சி மைனஸில் போய் நிற்கும். இருப்பதும் பிடுங்கப்படும்.
மதம் என்பது வீட்டின் பூஜையறையில் இருக்கவேண்டியது. அதை தூக்கி ஆட்சிக் கட்டிலில் வைத்தால் அது, 'அருந்ததி தெரியுது பாருங்கோ..' என கல்யாண புரோகிதர்கள் ஏமாற்றுவதைப் போல இல்லாத ஒன்றைக் காட்டி ஏமாற்றுமே தவிர, அதற்கு நிர்வாகமும் தெரியாது ஒன்றும் தெரியாது. 'மனசாட்சியே இல்லாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அதுக்கு நாங்களா பொறுப்பு?' எனக் கேட்கும்.
தேசபக்தி என்பது ஒரு நாட்டின் கொடியின் மீது, தேசியகீதத்தின் மீது வைப்பதல்ல. தேசத்தின் மக்கள் மீதும், தேசத்தின் சீரான வளர்ச்சியின் மீதும் வைப்பது. எவன் ஒருவன் மக்களை விட மண்ணின் மீது பற்றாக இருக்கிறானோ அவனே தேசத்துரோகி என அறிக.
இதுதான் மிகவும் முக்கியம். வாட்சப் என்பது அரட்டை அடிக்கவும், கேர்ள்ஃப்ரண்ட் பாய்ஃப்ரண்டோடு கடலை போடவும் இருக்கும் ஒரு அழகான செயலி. அது செய்தித்தாளோ, நூலகமோ அல்ல. அதிலிருந்து வதந்திகளை 'செய்திகளாக' அறிந்துகொண்டு அரசியல் பேசினால் அறிவில் ஒட்டடை பிடித்துவிடும்.
எனவே படித்து டிகிரி வாங்கிவிட்டு, 'நம்ம நாடு ஏன் இப்படியே இருக்கு?' என அங்கலாய்த்தால் மட்டும் பத்தாது. வரலாற்றைப் படிக்கவேண்டும். உண்மைகளை, புள்ளிவிவரங்களை கொஞ்சம் சிரத்தை எடுத்து தெரிந்துகொண்டு கருத்துக்களை சுயமாக உருவாக்கிக் கொள்ளப் பழக வேண்டும்.
-டான் அசோக்












Click it and Unblock the Notifications