தமிழகத்தில் தொடரும் டெங்கு பலி - இன்று இதுவரை 4 பேர் மரணம்!
தமிழகத்தில் இன்றும் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் மரணமடைந்துள்ளனர்.
சேலம் : டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், அன்றாடம் டெங்கு காய்ச்சலால் நடைபெறும் உயிரிழப்புகள் என்பது தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் டெங்குவிற்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு பல்வேறு அரசியல் சவால்களை சந்தித்தது. ஆனால் அரசுக்கு மிகப்பெரும் சவலாக இன்றும் இருப்பது தமிழக மக்களை வாட்டி எடுக்கும் டெங்கு காய்ச்சலுக்குக் காரணமாக ஏடிஸ் கொசு. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு கொடுப்பதற்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வந்தது.
தற்போது கொசுவை வளர்க்கும் கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கும் படலம் நடைபெற்று வருகிறது.
ஏடிஸ் கொசுப் புழு வளர்ச்சிக்கு காரணமாக இருப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் அபராதங்களை விதித்து வருகின்றன. எனினும் அன்றாடம் தமிழகத்தில் நடக்கும் டெங்கு மரணங்கள் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதே போன்று ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த சிறுமி சாருமதி உள்பட மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.