25 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நாளை ஆதரவை வாபஸ் பெற்றால்.. ?
தினகரன் ஆதரவு 25 எம்.எல்.ஏக்களும் நாளை ஆதரவை வாபஸ் பெற்றால் எடப்பாடி அரசு கவிழும் அபாயம் உள்ளது.
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை ஆளுநரை சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பின் போது ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது.
அதிமுகவின் ஓபிஎஸ் அணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைந்துவிட்டன. இதற்கு தினகரன் ஆதரவு 25 எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த 25 எம்.எல்.ஏக்களும் இன்று ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.
ஆதரவு வாபஸ்?
ஆளுநருடனான இச்சந்திப்பின் போது எடப்பாடி அரசுக்கான ஆதரவை தாங்கள் வாபஸ் பெறுவதாக தெரிவிக்க வாய்ப்புண்டு. இந்த முடிவில் தினகரன் ஆதரவு 25 எம்.எல்.ஏக்களும் உறுதியாக இருந்தால் முறைப்படி ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வேண்டும்.
ஆளுநர் உத்தரவிடலாம்
இதையடுத்து அதிகபட்சம் 15 நாட்களுக்குள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார். தற்போதைய நிலையில் சட்டசபையில் அதிமுகவுக்கு மொத்தம் 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
பெரும்பான்மைக்கு 117
இதில் 25 பேர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள். சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 118 எம்.எல்.ஏக்கள். ஜெயலலிதா மறைவால் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தாலே போதும்.
ஆட்சி கவிழும் அபாயம்
ஆனால் 25 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அரசுக்கான ஆதரவை விலக்கினால் 110 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் கிடைக்கும். ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழும் நிலையே உருவாகும்.