இன்னும் எத்தனை நிர்மலா தேவிகள் இருக்கிறார்களோ.. திருவண்ணாமலை நீதிபதி ஆவேசம்
Recommended Video
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அரசு வேளாண் கல்லூரியில் மாணவியிடம் மாவட்ட நீதிபதி மகிழேந்தி இன்று விசாரணை நடத்தினார். பாதிப்பை ஏற்படுத்திய உதவிப் பேராசிரியைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ளது அரசு வேளாண் கல்லூரி. இங்கு சென்னையை சேர்ந்த 22 வயது மாணவி பிஎஸ்சி படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த இவருக்கு பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விடுதி வார்டன்களான புனிதா, மைதிலி ஆகியோரிடம் புகார் கூறிய நிலையில் இவர்கள் இருவரும் மாணவியை சமாதானப்படுத்தி பேராசிரியர் சொல்வதை கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவி மீது சக மாணவர்கள் புகார் கூறி கல்லூரியில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தகவலறிந்த மாவட்ட நீதிபதி மகிழேந்தி மாணவியிடம் வந்து விசாரணை நடத்த கல்லூரிக்கு வந்தார்.
அவர் கல்லூரி பேராசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவி, சக மாணவிகள், பல்கலைக்கழக துணைவேந்தர், டீன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் மாணவி மீது திருட்டுப் பட்டம் கட்டி ஒரு புகார் கல்லூரியிலிருந்து கிளம்பியது. மாணவர்களும் போராட்டம் நடத்தினர். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே விசாரணை முடிந்த பின்னர் நீதிபதி மகிழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நடந்த சம்பவம் குறித்து வெட்கமாக இருக்கிறது. நிர்மலா தேவிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. இன்னும் எத்தனை நிர்மலா தேவிகள் இதுபோல கல்லூரிகளில் உலா வருகிறார்கள் என்றும் யோசிக்க வைக்கிறது.
இந்த சம்பவத்தால் தமிழக பெண்கள் வெட்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தவறு செய்த அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி வேறு கல்லூரிக்கு இடமாற்றம் கேட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் மகிழேந்தி.