கட்சி உடைந்தால் என்ன... “மாற்று அரசியல் மாநாடு” நடத்த அதிரடியாக தயாராகும் தேமுதிக - மநகூ!
சென்னை: மக்கள் நலக்கூட்டணி மற்றும் தேமுதிகவின் "மாற்று அரசியல் தேர்தல் சிறப்பு மாநாடு" ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது.
மக்கள் நலக் கூட்டணியினர், முதலில் திருச்சியில் மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். திருச்சியில் மாநாடு நடத்துவதில் இடம் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு முன்பக்கம் உள்ள பெரிய மைதானத்தில்தான் மாநாட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன.

சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் தொண்டர்கள் அமர்வதற்காக இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். ஏப்ரல் 3 ஆம் தேதி காலையிலிருந்தே ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மைதானத்தைச் சமன் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேடை அமைக்கும் பணி பந்தல் சிவா என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது. ‘‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை வடிவில் மேடை அமைத்து, ஐந்து கட்சிகளின் கொடியையும் கோட்டை உச்சியில் பறக்கவிட வேண்டும். கூட்டணியில் உள்ள 5 கட்சிகளின் தலைவர்களின் படமும் மேடைக்குப் பின்புறம் இருக்க வேண்டும்.
மாநாட்டு மேடையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் திட்டமும் தயாராகிவருகிறது. விஜயகாந்த்துக்கு ராசியான எண் 5. அதனால் மாநாட்டில் வெளியிடப்படும் வேட்பாளர்கள் பட்டியலின் கூட்டுத்தொகை 5 வருவதுபோல் இருக்கும். அதுபோன்று ஐந்தாவது வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.
மக்கள் நலக் கூட்டணியினரின் விஜயகாந்த்துடனான முதல் சந்திப்பு, டிசம்பர் 23 ஆம் தேதி நடந்தது. கூட்டணி உறுதியானதை அடுத்து மார்ச் 23ல் மீண்டும் விஜயகாந்த் உடனான சந்திப்பு நடந்தது. 5 ராசி எண் என்பதாலேயே 23 ஆம் தேதி விஜயகாந்த்தை சந்தித்தார்களாம். அதுபோல் ஏப்ரல் 23ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தேமுதிகவிலிருந்து அதிருப்தியடைந்த் சந்திரகுமார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications